இந்திய ஒற்றுமை பயணம் | ராகுல் காந்தி நடைபயணம் – குமரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தேசிய கொடி வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து தொடங்கும் இந்த நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். இதற்காக காந்தி மண்டபம் வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற பிரார்த்தனையில் ராகுல் காந்தியுடன் அமர்ந்து பங்கேற்றார். முன்னதாக, ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி, ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காந்தி மண்டபத்தில் நடந்த பிரார்த்தனையில் இருவரும் பங்கேற்றனர். பின்னர், காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து நடைபயணத்தை ராகுல் தொடங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ராகுலிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.அப்போது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர். அங்கிருந்து 600 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் ராகுல் காந்தி, அங்கு திரண்டிருக்கும் தொண்டர்களிடையே பேசுகிறார்.

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, இதற்காக தமிழகம் வந்த அவர் இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்தார். அங்கு அவர் தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அங்கு தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்து வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.