சென்னை: பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை ரசிகர்களை அதுபற்றி பேசவும் விவாதிக்கவும் செய்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் கேரக்டரான பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை விட வாசகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பிடித்தது அந்த கதையின் நாயகன் வானரகுல வீரன் வல்லவராயன் வந்தியத்தேவன் தான்.
அப்படி அந்த கதாபாத்திரத்தில் என்னதான் பாஸ் இருக்கு என கேட்கும் நாவலை படிக்காத ரசிகர்களுக்கு வந்தியத்தேவன் கதைச் சுருக்கத்தையும் அந்த கதாபாத்திர சிறப்புகளையும் இங்கே கொடுக்க முயற்சி செய்துள்ளோம்.
எம்ஜிஆர் இரட்டை வேடத்தில்
அருள்மொழி வர்மனாகவும் வந்தியத்தேவனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்க நடிகர் எம்ஜிஆர் முடிவு செய்து பொன்னியின் செல்வன் படத்தை தொடங்கினார் என்றும் ஆனால், அவரது ஆசை நிறைவேறாமல் போய் விட்டதாகவும் கமல் உள்ளிட்ட பலரும் தகவல் தெரிவித்துள்ளனர். அனிமேஷன் வீடியோவாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் தான் வருகிறார்.

கமலுக்கு விருப்பம்
மருதநாயகம் படத்தைப் போலவே பொன்னியின் செல்வன் படத்தையும் இயக்க பெரு முயற்சிகளை நடிகர் கமலும் மேற்கொண்டுள்ளார். ஆனால், 5 புத்தகங்கள் கொண்ட 2000 பக்கங்கள் கொண்ட கதையை 3 மணி நேர சினிமாவாக சுருக்க முடியாமலே அந்த படம் உருவாகாமல் போனது. கமலின் கண்ணும் வந்தியத்தேவன் மீதே இருந்தது.

ஜெயலலிதா தேர்வு
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதா பொன்னியின் செல்வன் படத்தை படமாக்க வேண்டும் என்றும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் சிவாஜி அல்லது ரஜினி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் மணிரத்னம் ஆரம்பிக்கும் போதே விஜய், மகேஷ்பாபுவை எல்லாம் வைத்து பண்ணனும் என்று ஆசைப்பட்டுள்ளார். விஜய் தான் வந்தியத்தேவன் கதாபாத்திரமாம்.

அப்படி என்ன சிறப்பு
இப்படி அனைத்து முன்னணி நடிகர்களும் விரும்பும் அளவுக்கு அப்படி அந்த கதாபாத்திரத்தில் என்ன சிறப்பு இருக்கு என்றால் முதல் காரணம் கதை ஆரம்பிப்பது முதல் முடியும் வரை அந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் இருக்கும். அதிகளவு ஸ்க்ரீன் பிரசன்ஸ் தான் நடிகர்களின் முதல் தேர்வாக இருக்கும். அதன் பிறகு அந்த சீரியஸான ராஜ தந்திர கதையில் சிரித்துக் கொண்டே அனைத்தையும் சாதிக்கும் ஒரு கதாபாத்திரம் என்றால் அது வந்தியத்தேவன் மட்டும் தான்.

கல்கி தான் வந்தியத்தேவன்
ராஜ ராஜ சோழன் முடி சூடி தஞ்சை பெரிய கோயில் எனும் அதிசயத்தை கட்டுவதற்கு முன்பாக அந்த சிம்மாசனமே வேண்டாம் என தனது சித்தப்பா உண்மையான மதுராந்தகனுக்கு கொடுக்கும் கதையையே பொன்னியின் செல்வன் என நாவலாக எழுதினார். அந்த கதையை சொல்ல ஒரு கதை மாந்தன் தேவை என நினைத்த அவர் கற்பனையாக தன்னையே அந்த கதைக்குள் பொருத்திக் கொள்ள உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் வந்தியத்தேவன் என்றும் பலர் சொல்கின்றனர். உண்மையாகவே அப்படி வீரன் நிஜத்திலும் வாழ்ந்துள்ளார் என்றும் கூறுபவர்களும் உண்டு.

நந்தினிக்கு மயங்காதவன்
வாள்விழியால் வளை விரித்தால் வஞ்சனை வெல்லாது.. வலைதனிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது என படையப்பா படத்தில் ரஜினிக்கு எழுதப்பட்ட வரிகளுக்கு உண்மையிலேயே சொந்தக்காரர் வந்தியத்தேவன் தான். நந்தினியின் அழகை கண்டு பெரிய பழுவேட்டரே மயங்கி திருமணம் முடித்த நிலையில், அவள் அழகிற்கு மயங்காத ஆண்களே இல்லை என்பது போல கதை முழுக்க வியாபித்து இருக்கும். ஆனால், அவளிடமே சிக்காத ஒரு ஆள் யாரென்றால் அதுவும் நம்ம வந்தியத்தேவன் தான். கார்த்தி அந்த கதாபாத்திரத்திற்கு நீதி செய்தாலே படம் நிச்சயம் வெற்றி பெறூம் என்கின்றனர்.