சார்ஜா,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா சேசாய், ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியாக தொடங்கிய குர்பாஸ் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹஸ்னைன் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
அடுத்து இப்ராகிம் ஜட்ரான் களம் இறங்கினார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டகாரர் சேசாய் 21 ரன்களில் போல்டு ஆனார். இதையடுத்து கரீம் ஜனத் களம் இறங்கினார். ஜனத் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய நஜிபுல்லா ஜட்ரான் 10 ரன்னுக்கும், கேப்டன் முகமது நபி டக்-அவுட் ஆகி அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ஓமர்சாய் களம் இறங்கினார். இப்ராகிம் ஜட்ரான் 36 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஓமர்சாய் 10 ரன்னும், இறுதி ஓவரில் அதிரடி காட்டிய ரஷித் கான் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர் . பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராப் 2 விக்கெட்டும், நசீம் ஷா, ஹஸ்னைன், முகமது நவாஸ், சதாப் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர்.
பாபர் அசாம் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆனார். அடுத்துவந்த பகர் சமான் 5 ரன்களுடன் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் 20 ரன்னில் வெளியேறினார்.
பின்னர், களமிறங்கிய இப்தார் அகமது, ஷதாப் கான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்தார் கான் 30 ரன்னிலும், ஷதாப் கான் 36 ரன்னிலும் வெளியேறினர்.
பின்னர் வந்த பாகிஸ்தான் வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பரூக்கி கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கு பறக்கவிட்டார்.
இதன் மூலம் 19.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 131 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றது. பாகிஸ்தான் தகுதிபெற்றதை தொடர்ந்து இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதன் மூலம் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான், இந்தியா அணிகள் இழந்தன.