சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் உள்ளது..! – முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து..!

ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தை கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஓணம் பண்டிகை கேரளாவில் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழாவான திருவோணம் நாளை (இன்று) கொண்டாடப்பட இருக்கிறது. நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள்.
அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி, அறுசுவை உணவருந்திச் சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம். கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒண்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது. உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழகத்தின் சார்பாக எனது ஓணத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதைப் பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத் திருவிழாக்கள் அமையட்டும். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.