தென்காசி: திருமணமான ஏழு நாளில் கொலையான இளம்பெண் – நடந்தது என்ன… போலீஸ் விசாரணை!

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள துப்பாக்குடி கிராமத்தின் அருகில் உள்ள ஓர் ஓடையில் இளம்பெண்ணின் உடல் கிடந்ததை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்க்குறிச்சி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் வந்து பார்த்தபோது உயிரிழந்தவரின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்ததால் கொலை என்பது உறுதியானது.

கொலைசெய்யப்பட்ட இசக்கி செல்வி

சுமார் 23 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், அந்தப் பெண் யார் என்பது பற்றி விசாரணை நடத்தினர். அதில், கொலையானவர் நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகள் இசக்கி செல்வி என்பது தெரியவந்தது.

இசக்கி செல்விக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மறுநாளில் (செப்டம்பர் 1-ம் தேதி) அவருக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், அதிகாலையில் வேறொரு நபருடன் சென்று திருமணம் செய்துகொண்டார். அதற்கு இரு வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் கோவிலூத்து கிராமத்தில் உறவினரின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

கொலை

இசக்கி செல்விக்கும் அவர் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் கோபத்தில் அவர் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் உடல் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஓடையில் கிடந்ததால், அவரைக் கொலைசெய்தது யார் என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இசக்கி செல்வியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்திவரும் போலீஸார், ஏற்கெனவே நிச்சயமான மணமகன் மற்றும் அவரது உறவினர்களிடமும் விசாரிக்கின்றனர். அத்துடன் இசக்கி செல்வியின் திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள்

கொலை நடந்த இடத்தின் அருகில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் கிடந்துள்ளது. அதை போலீஸார் கைப்ப்பற்றி உள்ளனர். விரைவில் கொலை செய்த நபர் பிடிபடுவார் என போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.