உலகின் நீண்டகால ராணி இரண்டாம் எலிசபெத்| Dinamalar

பயோடேட்டா

பெயர் : ராணி இரண்டாம் எலிசபெத்

வயது : 96

பிறந்த தேதி : 1926 ஏப். 21, லண்டன்

பெற்றோர் : ஐந்தாம் ஜார்ஜ் – முதலாம் எலிசபெத்

கணவர் பெயர் : பிலிப் (1921 – 2021)

ராணி பதவிக்காலம் ( 1953 ஜூன் 2 – 2022 செப். 10)

குடும்பம் : மூன்று மகன்கள் , ஒரு மகள்

எலிசபெத் ராணியாக பதவியேற்றதே சுவாரஸ்யமானது. 1926ல் எலிசபெத் பிறந்தபோது தாம் பின்னாளில் பிரிட்டனின் ராணியாவோம் என எண்ணியிருக்க மாட்டார். ஏனெனில் அப்போது ஆட்சிபுரிந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் 2வது மகன்தான் எலிசபெத்தின் தந்தை. (மூத்தவருக்கு தான் மன்னராக முடிசூடப்படுவது வழக்கம்). ஆனால் 1936ல் ஐந்தாம் ஜார்ஜ் மறைவுக்குப்பின் மூத்த மகன் எட்டாம் எட்வர்ட் மன்னர் ஆனார். ஆனால் அதே ஆண்டில் தாம் காதலித்த பெண்ணை கைப்பிடிப்பதற்காக மன்னர் பதவியை தியாகம் செய்து விட்டார். பிரிட்டன் அரசுரிமையை தம் தம்பி இளவரசர் ஆல்பர்ட்டிற்கும் (எலிசபெத் தந்தை) அவரது சந்ததியினருக்கும் கொடுத்துவிட்டார். அதனால் ஆல்பர்ட் ஆறாம் ஜார்ஜ் என்ற பெயருடன் பிரிட்டன் மன்னர் ஆனார். அவரது மறைவுக்குப்பின் மூத்த மகள் எலிசபெத் தன் 25 வயதில் 1953 ஜூன் 2ல் பிரிட்டன் ராணியாக முடிசூடினார்.

பெயரளவு தலைவர்

பிரிட்டிஷ் ராணி, இந்திய ஜனாதிபதியைப் போல் பெயரளவுக்கான ஆட்சித் தலைவர்தான். உண்மையான அதிகாரம் இந்தியாவைப் போல் பார்லிமென்ட்டுக்கு தான் உள்ளது. எனினும் எலிசபெத் தம் பதவிக்கு எந்த கட்சியையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அங்கு தேசிய கீதத்திற்குப் பதில் மன்னர் வாழ்த்து கீதம்தான் பாடப்படுகிறது. அப்பதவிக்கு இன்னும் பிரிட்டன் மக்கள் மதிப்பளிக்கின்றனர்.

பதவிக்கு ஏற்ற புண்பு

உயரிய ஒழுக்கம், பண்பாடு, செயல்பாடும் உடையவர் எலிசபதெ். பொதுவாக அரச குடும்பங்களில் எழும் எந்த முறைகேடுகளையும் இவர் மீது கூற முடியாது. முறைப்படி வருமான வரி செலுத்தினார். இவருக்கு முன் ஆட்சிபுரிந்த எவரும் வரி செலுத்தியதில்லை. 52 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும் இருந்தார். மிக அதிகமாக வெளிநாடு சென்ற பிரிட்டன் ராணி இவரே.

திருமணம்

1947 நவ., 20: டென்மார்க் இளவரசர் பதவியை துறந்து விட்டு பிரிட்டன் குடியுரிமை பெற்ற பிலிப்பை, – எலிசபெத் ராணி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சார்லஸ் (இவர் தான் அடுத்த மன்னர்), ஆன்ட்ரூ, எட்வர்டு ஆகிய மூன்று மகன்களும், அன்னே என்ற ஒரு மகளும் உள்ளனர்.

நீண்டகால ராணி

உலகில் நீண்டகாலம் (70 ஆண்டு, 214 நாட்கள்) அரச பதவி வகித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார். முதலிடத்தில் பிரான்சின் மறைந்த 14ம் லுாயிஸ் (1643 – 1715, 72 ஆண்டு, 110 நாட்கள்) உள்ளார். மூன்றாவது இடத்தில் மறைந்த தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், (1927 – 2016, 70 ஆண்டு, 126 நாட்கள்) இருந்தார். இதற்குமுன் பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் என்ற சாதனையை 2015ல் பெற்றார். இதற்குமுன் விக்டோரியா ராணி (1837 – 1901 வரை, 63 ஆண்டு, 216 நாட்கள் ) பதவி வகித்தார். மூன்றாம் இடத்தில் மன்னர் மூன்றாம் ஜார்ஜ் (59 ஆண்டு, 96 நாட்கள்) இருக்கிறார்.

பிரிட்டன் ஆட்சி முடிவு

இவரது பாட்டி விக்டோரியா ராணி தலைமையின் கீழ் இருந்ததை போல ஏகாதிபத்திய (பல நாடுகள்) ஆட்சி இல்லை. எலிசபெத் ஆட்சியில் 1997ல் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்ததுடன் பிரிட்டனின் ஏகாதிபத்திய சகாப்தம் முற்றுப் பெற்றது.

வேதனையளித்த விவாகரத்து

இவரது மூத்த மகனும் இளவரசருமான சார்லஸ் – டயானா திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இது ராணி எலிசபெத்துக்கு வேதனையளித்த விஷயம். அதேபோல் சமீபத்தில் சார்லஸ் டயானா தம்பதியரின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதி பிரிட்டன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிதும் இவரை வருத்தத்துக்கு உள்ளாக்கியது.

மூன்று முறை

இந்தியாவிற்கு 1961, 1983, 1997 என மூன்று முறை வருகை தந்துள்ளார். முதன்முறை வந்தோ டில்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் ஆக்ரா, மும்பை, வாரணாசி, உதய்பூர், ஜெய்ப்பூர், கோல்கட்டா, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களுக்கு சென்றார். கடைசியாக இந்தியாவின் 50வது சுதந்திரதினத்தையொட்டி 1997ல் வருகை புரிந்தார். இப்பயணத்தின் ஒருபகுதியாக நடிகர் கமலின் மருதநாயகம் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

வாழ்க்கைப்பயணம்

* 1926 ஏப். 21: இரண்டாம் எலிசபெத் பிறந்தார்.

* 1933 : இவருக்கு நாய்குட்டி, குதிரைகள் மீது அலாதி பிரியம். தந்தை ஆறாம் ஜார்ஜ் இவருக்கு ‘வேல்ஸ்’ நாய்க்குட்டியை வாங்கி தந்தார். அன்றிலிருந்து அரண்மணையில் நாய்க்குட்டிகள் இடம்பெறத் துவங்கின.

* 1940 : முதன்முறையாக வானொலியில் (பி.பி.சி.,ரேடியோ) உரையாற்றினார். அப்போது இரண்டாம் உலகப்போரில் வீரர்கள் தைரியத்துடன் போரிட வேண்டும் என பேசினார்.

* 1942: இரண்டாம் உலகப்போரின் போது வின்ஸ்டர் அரண்மனையில் தன் சகோதரியுடன் இணைந்து, நாடகங்கள் மூலம் போரைப் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

* 1945 : ராணுவத்தின் படைக்கலப்பிரிவில் இளவரசி இணைந்தார். வாகனங்களை இயக்கவும், பழுதடைந்தால் சரி செய்யும் முறையையும் கற்றுக் கொண்டார்.

* 1945: இரண்டாம் உலகப்போர் நிறைவு விழாவில் பங்கேற்றார்.

* 1947 : ராணுவ துணை அதிகாரியான பிலிப்பை திருமணம் செய்தார்.

* 1953 ஜூன் 2 : பிரிட்டன் ராணியாக முடி சூடினார்.

* 1957: ராணியின் முதல் கிறிஸ்துமஸ் செய்தி ‘டிவி’யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

* 1957 : உலகின் மிகப்பெரிய அணுசக்திநிலையத்தினை கும்பர் லாண்ட் இடத்திலுள்ள கால்டர் ஹாலில் தொடங்கி வைத்தார்.
* 1961: முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்தார்.

* 1965: மேற்கு ஜெர்மனிக்கு பயணம்.

* 1973: தன் ஆஸ்திரேலியா பயணத்தின் போது, புகழ்பெற்ற சிட்னி ஓப்ரா ஹவுஸை திறந்து வைத்தார்.

* 1976 : ராணுவ சம்பந்தமான தகவல்களை முதன்முதலில் இ-மெயில் மூலம் அனுப்பினார்.

* 1981 : தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருந்து தப்பினார்.

* 1983 : இரண்டாவது முறையாக இந்திய பயணத்தின் போது அன்னை தெரசாவை சந்தித்து, அவுரது சேவையை பாராட்டினார்.

* 1986 : பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து முதன் முறையாக சீனாவுக்கு சென்றார்.

* 1991 : அமெரிக்க பார்லிமென்டில் உரையாற்றினார்.

* 1992 : வருமானவரி செலுத்துவதை ஏற்றுக்கொண்டார்.

* 2002 பிப். 9: தன் ஒரே சகோதரி மார்க்ரெட் மறைந்தார்.

* மார்ச் 30: தாய் முதலாம் எலிசபெத் 101, மறைந்தார்.

2021 ஏப். 9: கணவர் பிலிப் மறைந்தார்.

2022 செப். 8: உடல்நலக்குறைவால் மறைந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.