மாதம் ரூபாய் 8000 சம்பளத்துடன் தனது வாழ்க்கையை தொடங்கிய ஒருவர் இன்று இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளார். அவர் தான் Zerodha நிறுவனத்தின் நிகில் காமத்.
பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு 8000 சம்பளத்துடன் தனது 17வது வயதில் வேலைக்கு சேர்ந்த நிகில் காமத், அதன் பிறகு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இன்று முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
நிகில் காமத் ஆரம்பித்த Zerodha நிறுவனம் இன்று மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பங்குத்தரகு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
34 வயதில் பல கோடிகளுக்கு அதிபதி.. உலக பணக்காரர்கள் பட்டியலில் அபூர்வா மேத்தா, நிகில் காமத்..!

17 வயதில் ரூ.8000 சம்பளம்
17 வயதில் ரூ.8000 சம்பளத்தில் தனது வாழ்க்கையை தொடங்கிய நிகில் காமத், தனது மூத்த சகோதரருடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய பங்குத்தரகு நிறுவனமான Zerodha என்ற நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்து தற்போது மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற நிறுவனமாக உள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 100 பணக்காரர்கள் பட்டியலில் இந்த சகோதரர்கள் பெயர் இடம்பெற்று இருந்தது.

ஆரம்பகால வாழ்க்கை
தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து நிகில் காமத் அவர்கள் கூறியபோது, ‘எங்கள் தந்தை ஒரு வங்கியில் பணி புரிந்ததால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். கடைசியாக நாங்கள் பெங்களூரில் குடியேறிய போது எனக்கு வயது ஒன்பது. தொடர்ச்சியான இட மாற்றங்கள் காரணமாக எனக்கு பள்ளி படிப்பு வெறுத்து போனது அதனால் நான் கல்வி மீதான ஆர்வத்தை இழந்தேன்.

பழைய செல்போன் வியாபாரம்
இதனையடுத்து நான் பழைய செல்போன்களை வாங்கி விற்கும் தொழிலை முதலில் எனது நண்பர்கள் மத்தியில் செய்தேன். இது என் அம்மாவுக்கு தெரிய வந்தபோது அவர் என்னை கடுமையாக திட்டினார். முதலில் படிப்பு அப்புறம் தான் தொழில் என அறிவுரை கூறினார். ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு கூட எழுதாமல் பள்ளியில் இருந்து நான் வெளியேறினேன்.

ரூ.8000 சம்பளம்
எனது பெற்றோர்கள் என்னை பற்றி மிகவும் கவலைப்பட்டார்கள். அதன் பிறகு நான் ரூ.8000 சம்பளத்துக்கு வேலைக்கு சென்றேன். என் 18 வயதில் நான் பங்கு வர்த்தகம் செய்ய ஆரம்பித்தேன். எனது அப்பா தனது சேமிப்பில் இருந்த பணத்தை என்னை நம்பி கொடுத்து அதை நிர்வகிக்க சொன்னார். அதை வெற்றிகரமாக செய்தேன். அதன் பின் எனது சகோதரருடன் சேர்ந்து Zerodha நிறுவனத்தை தொடங்கினேன்.

Zerodha நிறுவனம்
2010ஆம் ஆண்டு தொடங்கிய Zerodha நிறுவனம் உடனடியாக வளர்ச்சி பெறவில்லை. இருப்பினும் நான் தினமும் கடுமையாக வேலை செய்தேன். என்னுடைய வேலைக்கு கண்டிப்பாக ஒருநாள் நல்ல பயன் கிடைக்கும் என்று எனக்கு நானே அறிவுரை கூறி கொண்டேன்.

கடின உழைப்புக்கு பலன்
இப்போது நான் செய்யக்கூடிய கடின உழைப்புக்கு கண்டிப்பாக இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து நல்ல பலன் கிடைக்கும் என்பதை நான் முழுமையாக நம்பினேன். அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும், முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கை தான் எனது இந்த வெற்றிக்கு காரணம் என்று நிகில் காமத் கூறியுள்ளார்.
How billionaire Nikhil Kamath’s journey started with a Rs 8,000 a month call centre job
How billionaire Nikhil Kamath’s journey started with a Rs 8,000 a month call centre job | ரூ.8000 சம்பளத்துடன் ஆரம்பித்த நிகில் காமத் பயணம்.. இன்று கோடீஸ்வரர் ஆனது எப்படி?