இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பு: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியிடம் இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பை வழங்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, “இம்மானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த கூடாது என இருட்டடிப்பு செய்ய இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், காவல்துறை திட்டமிட்டு செய்து வருகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பை மாற்ற வேண்டும், இம்மானுவேல் சேகரனுக்கு தொடர்பில்லாதவர்கள் நினைவிட பொறுப்பு நடத்தி வருகிறார்கள், புதிய தமிழகம் கட்சியிடம் நினைவிட பொறுப்பை வழங்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் காவல்துறை மெத்தனமாக நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி, மதுரையிலிருந்து பரமக்குடி சென்ற போது பல்வேறு இடங்களில் காவல்துறை தடுத்து நிறுத்தியது, 4 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது, பரமக்குடிக்கு செல்ல விடாமல் காவல்துறை வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டது, எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மற்றோரு அமைப்புக்கு அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதித்தது, ஒரே சமூகத்திற்கு உள்ளாக மோதலை உருவாக்க காவல்துறை நினைக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது, ஒரு வாக்குறுதியையும் திமுக செயல்படுத்தவில்லை. அனைத்து தேர்தல் வாக்குறுதிக்கும் நேர்மாறாக திமுகவின் நடவடிக்கைகள் உள்ளது. மின் கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும், தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்,” என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

மின்சார வாரியத்தில் உள்ள ஊழலை சரி செய்தாலே மின் கட்டணத்தை உயர்த்த தேவையில்லை என்ற அவர், மின் கட்டண உயர்வுக்கு எதிராக செப்டம்பர் 20ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்வு தோல்வியின் சரிவுக்கு திமுகவே பொறுப்பு. திமுகவின் தவறான பிரச்சாரத்தால் நீட்டை மாணவர்கள் எதிர்க் கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழல் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அரசியலுக்காக நீட் விவகாரத்தில் திமுக தவறாக செயல்பட்டு வருகிறது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. முதல்வர் சர்வாதிகார போக்குடன் பேசி வருகிறார். மக்களின் குரல்களை முதல்வர் செவி சாய்த்து கேட்பதில்லை எனவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.