குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்; வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் – தொழில் அதிபர் கைது

பெலகாவி:

விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்தவர் சிவானந்தா. இவருக்கும் பெலகாவி மாவட்டம் அதானியை சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். தொழில் அதிபரான சிவானந்தாவுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் உண்டானது. இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் இருப்பதாக பிரீத்தி கருதினார். இதுதொடர்பாக சிவானந்தா, பிரீத்தி இடையே தகராறு உண்டானது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவானந்தாவிடம் கோபித்து கொண்டு பிரீத்தி தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை பிரீத்தியின் வீட்டிற்கு சென்ற சிவானந்தா தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி பிரீத்தியை அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவானந்தா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். பின்னர் தன்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால் உனது தலையில் சுட்டு விடுவேன் என்று பிரீத்திக்கு, சிவானந்தா கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அதானி போலீசார் பிரீத்தியின் வீட்டிற்கு விரைந்து சென்று சிவானந்தாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சிவானந்தா மீது அதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.