குவைத்: குவைத்தில் தமிழர் முத்துக்குமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் உடல் நாளைக்கு அவரின் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறி இவர் குவைத்துக்கு கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றார்.
குடும்ப கஷ்டம் காரணமாக, வெளிநாடு வேலைக்கு சென்றால் எல்லா கஷ்டமும் தீர்ந்துவிடும், கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்று நம்பிக்கையாக அவர் வெளிநாடு சென்றார்.
அதிர்ச்சி
ஆனால் வெளிநாடு சென்ற முத்துகுமரனுக்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. காரணம் அவரிடம் டிரைவர் உள்ளிட்ட வேலை என்று சொல்லி அழைத்து சென்றுள்ளனர். மாறாக அவரிடம் குவைத்தில் ஒட்டகம் மேய்க்கும்படி கூறி உள்ளனர். அதோடு அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். பாலைவனம் ஒன்றில் விட்டுவிட்டு ஒட்டகம் மேய் என்று கூறியுள்ளனர். சின்ன டென்ட் ஒன்றில் அவர் தங்க வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.

மோசமான இடம்
பொட்டல், பாலைவனத்தில் ஒரு சிறிய டென்டில் அவர் தங்கி உள்ளார். அவருக்கு சரியாக உணவும் கொடுக்கவில்லை. அதேபோல் அவர் இருந்த டென்டில் மின்சார வசதி கூட இல்லை என்று கூறப்படுகிறது. அவர் இது தொடர்பாக தனது முதலாளியிடம் கேட்டதற்கு அவர் கோபமாக பதில் அளித்துள்ளார். அதோடு இரண்டு முறை அவரை மோசமாக தாக்கியும் உள்ளார். உணவு சரியாக கொடுக்காமல் கொடுமையும் படுத்தி உள்ளார்.

கொடுமை
இந்த நிலையில்தான் கடந்த 5ம் தேதி முத்துக்குமரன் வீட்டிற்கு போன் செய்து விவரங்களை தெரிவித்து உள்ளார். தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்து உள்ளார். அதோடு நான் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும். ஏதாவது செய்யுங்கள் என்றும் உதவி கேட்டு இருக்கிறார். ஆனால் அதற்குள் 7ம் தேதி இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒட்டகம் மேய்க்க இவர் மறுத்ததால் அவரின் முதலாளி இவரை அங்கேயே சுட்டுக்கொன்றுள்ளனர்.

பிரேத பரிசோதனை
இதையடுத்து மீட்கப்பட்ட முத்துக்குமரன் உடன் உடனே பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவரின் மரணத்திற்கு துப்பாக்கியால் சுட்டதுதான் காரணம் என்று தெரிய வந்தது. அதே சமயம் அவரின் உடலில் வேறு சில மோசமான காயங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் பல இடங்களில் மோசமாக கம்பியால் தாக்கிய காயங்கள் இருந்துள்ளன. இந்த தகவல் தெரிந்து முத்துக்குமரன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடல் மீட்பு
இந்த நிலையில் அவரின் உடல் நாளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. சரியாக 13 நாட்களுக்கு பிறகு அவரின் உடல் தமிழ்நாடு கொண்டு வரப்படுகிறது. வெளிநாட்டு வாழ் தமிழக நலத்துறை சார்பாக இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. வெளிநாட்டில் இருந்து உடலை கொண்டு வருவது கொஞ்சம் சிரமம் என்பதால் இதற்காக பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில்தான் திருச்சிக்கு நாளை உடல் வந்து அதன்பின் அங்கிருந்து திருவாரூக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஏஜெண்டுகள் கைது
குவைத் அரசிடம் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் தமிழரை சுட்டுக்கொன்ற அந்த முதலாளி கைது செய்யப்பட்டார். இவரை வேலைக்கு அழைத்து சென்று ஏமாற்றிய ஏஜெண்டும் இங்கே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஏஜென்டிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் குவைத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.