செங்கல்பட்டு: கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன், இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை என்று அறிவித்து இருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதன் நிறுவனரும் நடிகருமான நெப்போலியன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வேலைவாய்ப்பு
அப்போது அவர், “நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் மத்திய அமைச்சராக இருந்தபோதும் தொடர்ந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பு கேட்டுக்கொண்டிருந்தனர். எனவே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் ஜீவன் டெக்னாலஜி கம்பெனி நிறுவப்பட்டது.

ஜீவன் டெக்னாலஜீஸ்
கடந்த 2000 வது ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஜீவன் டெக்னாலஜீஸ் நிறுவனம் படிப்படியாக உயர்ந்து இன்று ஆயிரம் நபர்களுக்கு மேல் பணியாற்றும் அளவிற்கு வளர்ந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டன. ஆனால், வேலைவாய்ப்புகளை குறைக்காமல் ஜீவன் நிறுவனம் செயல்பட்டது.

அரசியலுக்கு வரமாட்டேன்
குழந்தையின் உடல் நலக்குறைவால் சினிமா தொழிலில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. அரசியலில் இருந்து விலகி ஏழு வருடங்களாகிறது. இனி அரசியலுக்கு வரமாட்டேன். ஜீவன் டெக்னாலஜியின் அடுத்த கிளையை திருச்சி துவங்க உள்ளோம். அடிப்படையில் விவசாய குடும்பத்தை சார்ந்து நான் உள்ளதால் விவசாயம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

அரசியல் குரு கலைஞர்
அதற்காக கடந்த ஆண்டு 300 ஏக்கரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து நான்கு மாத காலங்களாக நிலத்தில் காய்கறிகளை விளைவித்து நானே பறித்து உபயோகிக்கிறேன். நான் சாகும்வரை அரசியலில் எனது குரு கலைஞர். சினிமாவுக்கு எனது குரு பாரதிராஜா. இதில் எந்த மாற்றமும் இல்லை.” என தெரிவித்தார்.