குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்களை கட்டி வைத்து அடித்த போலீஸ் – மனித உரிமை ஆணையத்தில் திரிணமூல் காங். புகார்

குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை பொதுவெளியில் கட்டி வைத்து, பிரம்படி கொடுத்த போலீசாருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இந்தப் புகார் தொடர்பான தகவலை, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள உந்தேலா கிராமத்தில் அண்மையில் நடந்திருந்தது. அந்தப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கற்களை வீசியதாக சொல்லி சில இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, லத்தியை கொண்டு பிரம்படி கொடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை ஈவு இரக்கமின்றி போலீசார் தாக்கிய விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் போனது அந்த ஆணையத்துக்கு வெட்கக்கேடு. அதேநேரத்தில் யாரும் இந்த விவகாரம் தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என ஆணையத்தால் காரணம் ஏதும் சொல்ல முடியாது. ஏனெனில், திரிணமூல் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என தனது ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு புகார் கொடுக்கப்பட்டதற்கான சான்றையும் அவர் பகிர்ந்துள்ளார். கற்களை வீசியவர்களுக்கு வழக்கப்பட்ட தண்டனை இது என போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை இந்த விவாகரத்தில் நீதிபதியாக நின்று தண்டனை கொடுத்துள்ளது. அவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது நடந்துள்ளது. அதனால், இதற்கு அரசியல் ரீதியிலான தூண்டுதல் கூட இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.