சிங்கப்பூரில் குடும்ப அலுவலகம் : முகேஷ் அம்பானி துவக்குகிறார்

மும்பை: ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தன்னுடைய குடும்ப முதலீடுகளை கவனித்துக்கொள்வதற்காக குடும்ப அலுவலகத்தை சிங்கப்பூரில் அமைக்கிறார்.
குடும்ப அலுவலகம் என்பது, தனியாருக்கான பிரத்யேக நிறுவனமாகும். ஒரு பணக்கார குடும்பத்திற்கான முதலீட்டு மற்றும் சொத்து மேலாண்மையை இவ்வலுவலகம் கையாளும். இப்படி ஒரு அலுவலகத்தை ஒருவர் அமைப்பதன் குறிக்கோள், தன்னுடைய தலைமுறைகளுக்கு செல்வத்தை திறம்பட பெருக்கி, வழங்குவதற்கான ஏற்பாடாகும்.
உலகின் பெரும் பணக்காரர்கள் பலர், அண்மைக் காலமாக, சிங்கப்பூரில் குடும்ப அலுவலகங்களை துவக்கி வருகின்றனர்.கடந்த 2020ல், சிங்கப்பூரில் 400 குடும்ப அலுவலகங்கள் இருந்த நிலையில், 2021ல், 700 ஆக அதிகரித்துஉள்ளது.


பாதுகாப்பு மற்றும் குறைவான வரி ஆகியவற்றின் காரணமாக, சிங்கப்பூரில் குடும்ப அலுவலகங்களை துவக்க விரும்புகின்றனர்.இந்த வரிசையில், தற்போது இந்தியாவிலிருந்து முகேஷ் அம்பானியும் சேர்ந்துள்ளார் என செய்திகள் வருகின்றன.இந்த சொத்து மற்றும் முதலீட்டு மேலாண்மை நிறுவனத்துக்கு தேவையான ஊழியர்களை நியமித்து, அதை இயக்குவதற்காக ஒரு மேலாளரும் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த அலுவலகத்தை அமைக்கும் பணியை, முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஓராண்டுக்குள் அலுவலகம் செயல்படத் துவங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.