
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்கள் அடங்கிய ‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த நூலை, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார். பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபால், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; “பெரியார், அண்ணா, கலைஞர் மாடல்களின் கலவையாக தற்போது மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை கொடுத்து வருகிறார். அதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த பாஜகவினரே, கருணாநிதியை விடவும் மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறி ஒப்புதல் கொடுத்து விட்டார்கள்.
இது, மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு. தமிழகத்தில் அடுத்த முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது. மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் நல்லாட்சியையும், நல்ல திட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதற்கு, அத்தனை பேரும் உதவ வேண்டும்.
திமுகவின் போர்க்குணம் குறைந்து விடவில்லை. அது என்றைக்கும் குறையாது. மத்திய அரசால் பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டாலோ திமுகவின் போர்க்குணம் கண்டிப்பாக வெளிவரும். இவ்வாறு அவர் பேசினார்.