அமெரிக்காவின் நெவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேளிக்கை விடுதிகள், பார்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிளார்க் நகர வீதியில் நடன அழகிகள் கவர்ச்சி நடனமாடும் மேடை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு கையில் கத்தியுடன் வந்த நபர் ஒருவர் நடன அழகிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கேட்டார். அவர் கையில் கத்தியுடன் இருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதற்கு மறுத்துவிட்டார்.
அதை மீறி நடன அழகிகளை நெருங்கி சென்ற அந்த நபர் திடீரென அவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலா புறமும் சிதறி ஓடினர்.
அந்த நபர் தன் கண்ணில்பட்டவர்களையெல்லாம் சரமாரியாக குத்தினார். இந்த பயங்கர சம்பவத்தில் நடன அழகிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கொலையாளியை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். தாக்குதல் நடத்திய நபர் யார், அவர் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in