காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது தாக்குதல்; ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு

காந்திநகர்,

குஜராத் மாநிலம் வன்ஸ்டா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த்குமார். இவர் அப்பகுதியில் பழங்குடியின சமூகத்தின் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில், நவ்சாரி மாவட்டம் ஹர்ஜம் என்ற பகுதியில் எம்.எல்.ஏ. ஆனந்த்குமார் நேற்று இரவு தனது காரில் சென்றார். அப்போது, அவரது காரை இடைமறித்த மர்ம கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்றது.

கும்பல் நடத்திய தாக்குதலில் ஆனந்த்குமார் முகத்தில் ரத்தக்காயம் ஏற்பட்டது. மேலும், அவர் பயணித்த கார் கண்ணாடியும் அந்த கும்பலால் உடைக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவலறிந்த ஆனந்த்குமாரின் ஆதரவாளர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் அவரது வீட்டின் அருகே நள்ளிரவு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் பழங்குடியின சமூகத்தினர் போராட்டத்தில் குதித்தனர். நெடுஞ்சாலைகளை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜுலா பஞ்சாயத்து பாஜக தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக எம்.எல்.ஏ. ஆனந்த்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், குரல் எழுப்பும் அனைவரும் பாஜக அரசால் துன்புறுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.