திருமலையில் சனிக்கிழமை 6 கி.மீ. வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதமாகும் என்பதால் நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள், அதிலும் குறிப்பாக தமிழக பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திருமலைக்கு படை எடுத்தனர். இதில், 2-வது சனிக்கிழமையன்று பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை நடை பெற்றது. இதில் சுமார் 3.5 லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்து கருட சேவையை கண்டுகளித்தனர். இதில் 87 ஆயிரம் பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.

இந்நிலையில், பிரம்மோற்சவம் கடந்த 5-ம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது 3-வது சனிக்கிழமையில் மீண்டும் பக்தர்கள் திருமலைக்கு வரத் தொடங்கினர். கடந்த 5-ம் தேதி முதலே திருமலைக்கு படையெடுக்கத் தொடங்கிய பக்தர்களால், நாளுக்கு நாள் தரிசன நேரமும் அதிகரித்துக்கொண்டே போனது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக 30 மணி நேரம், 48 மணி நேரம் என பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானமும், சர்வ தரிசனத்துக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால், தினமும் சுமார் 85 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். நேற்று 3-வது சனிக்கிழமையன்று கோயிலுக்கு வெளியே சுமார் 6 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.