ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு; திரிணாமுல் எம்எல்ஏ கைது.! அமலாக்கத்துறை நடவடிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா இன்று அதிகாலை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் அம்மாநில ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இவர்கள் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனையை விசாரிக்கும் அமலாக்கத்துறை, பார்த்தா சாட்டர்ஜி வாட்ஸ்அப் மூலமாக  திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ  மாணிக் பட்டாச்சார்யாவுடன் லஞ்சம் வசூலிப்பது குறித்து உரையாடியதாக தெரிவித்துள்ளது.

அதையடுத்து பழசிபாரா தொகுதி எம்எல்ஏவான மாணிக் பட்டாச்சார்யா இன்று அதிகாலை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஏற்கெனவே இந்த முறைகேடு விசாரணையில் இவரது பெயரும் அடிபட்டதால், மேற்கு வங்க ஆரம்பக் கல்வி வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து மாணிக் பட்டாச்சார்யா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.