அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயார்: டிடிவி தினகரன் அழைப்பு!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜகவுக்கு திமுக பயப்படுவதாகவும், சனாதனம் பேசியும் ராஜராஜ சோழனை வம்புக்கு இழுத்தும் திருமாவளவன் தமிழகத்தில் பாஜகவை வளர்த்து விடுவதாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். தற்போது திமுக ஆட்சி மேல் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். மின்கட்டண உயர்வை எதிர்க்கவில்லை. ஆனால், ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் அதனை உயர்த்தி இருக்க வேண்டும்.” என்றார்.

ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்கள் தான் தூக்கம் இல்லாமல் இருந்தார்கள் என சுட்டிக்காட்டிய அவர், “ஆனால் திமுக ஆட்சியில் முதலமைச்சர் தூக்கம் இல்லை என்கிறார்.முதலமைச்சரிடம் தைரியம் இல்லை. பொன்முடி பேசும் பேச்சுக்கு நடவடிக்கை இல்லை. மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, டாக்டரை கன்னியாகுமரிக்கு தூக்கி அடி என்கிறார். ஸ்டாலினால் இவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக பேசுவார். ஆனால் மத்திய அரசில் கூட்டணியில் இருப்பார். பெண்களுக்கு அதிகாரம் கொடுத்துவிட்டு பினாமிகளாக அவர்களின் கணவர்கள் செயல்படுகிறார்கள். மடியில் கனம் இருப்பதால் பயப்படுகிறார்கள். மதத்தைப் பற்றி தேவையில்லாத விஷயங்களை பேசி திசை திருப்புகிறார்கள்.” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவிலிருந்து வெளியேற்றியதால் உண்மையான தொண்டர்கள் வெளியேறினோம். அவர்களுடன் ஒன்றாக இணைவது என்பது எங்களுக்கும் நல்லதல்ல அவர்களுக்கும் நல்லதல்ல. எனவே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் ஒன்றினையாது; தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தயார். ஓபிஎஸ் கூட்டணிக்கு வாருங்கள் என்றுதான் அழைக்கிறார். திமுகவை வீழ்த்த ஒன்றினைந்து தேர்தலில் கூட்டணிக்கு தயார்.” என்றார்.

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், இந்திய பொருளாதாரத்தை சரி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியான அதிமுக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் நிற்கிறது. அதிமுகவில் ஒரு சில சுயநலவாதிகளின் ஆணவத்தால் சட்டமன்றத்தில் கூட இருக்கைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் திருந்தினால் இதற்கு வழி உண்டு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர்களது அகங்காரம் குறைந்து விடும் என்றும் டிடிவி தினகரன் அப்போது தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.