இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய மனு: தமிழக அரசுக்கு உத்தரவு!

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 – 21ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ – மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதனால் மாற்று திறனாளி மாணவ – மாணவியருக்கு இலவச லேப் டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த செப்டம்பரில் அரசுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான முதல் அமர்வு, இலவச லேப் டாப் திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கலாமே என அரசுக்கு அறிவுறுத்தி மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.