மணவாளக்குறிச்சி அருகே மொபட்-பைக் மோதல்; நிறைமாத கர்ப்பிணி போலீஸ் பலி.! வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே நேற்றிரவு நடந்த விபத்தில், நிறைமாத கர்ப்பிணி போலீஸ் உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி உஷா (37), வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். 7 வயதில் மகன் உள்ளான்.

தற்போது உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்றிரவு பணி முடிந்து, தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வெள்ளமோடி – அம்மாண்டிவிளை சாலை, கட்டைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது எதிரே அதிவேகமாக பைக்கில் வந்த முட்டம் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த அபிஷேக் பெக்கட் என்ற சஞ்சய் (19) என்பவர் உஷாவின் மொபட் மீது மோதினார். இதில் உஷா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உஷா, நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உஷாவின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிறைமாத கர்ப்பிணி போலீஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் அதிகாரிகள் சென்று உஷாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.