சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அரசு ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் குவாரிகள் நடைபெறாமல் தடுக்கவும், சட்டவிரோத மணல் குவாரி நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் மாநிலத்தின் வருவாய் இழப்பைத் தவிர்க்கும் நோக்கத்தில் தலைமைச் செயலாளர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் அறிக்கை தாக்கல் செய்யப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. பின்னர் நீதிபதிகள், அரசுத் தரப்பில் பதிலளிக்க அரசுக்கு இறுதியாக ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்தக் கால அவகாசத்துக்குள் அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.