திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்: தேவஸ்தானம் தகவல்!

வானியல் நிகழ்வுகளில் முக்கியமானவை கிரகணங்கள். குறிப்பாக, சூரிய, சந்திர கிரகணங்கள் முக்கியமானவை. சந்திர கிரகணம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படும் நிகழ்வு. அதேபோன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது அது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், 2022 ஆண்டுக்கான சூரிய கிரகணம் அக்டோபர் 25ஆம் தேதியும், சந்திர கிரகணம் நவம்பர் 8ஆம் தேதியும் வருகிறது. இதனை முன்னிட்டு அந்த தினங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாகவும், அந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள தகவலில், “சூரிய கிரகணம் வரும் 25ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை நிகழும். இதனால், அன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும். அதேபோல், நவம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளதால், அன்றைய தினமும் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும். இரண்டு நாள்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் சுமார் 12 மணி நேரம் மூடப்படும். அந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரகணத்துக்கு பின்னர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். எனவே, விஐபி தரிசனம் மற்றும் கட்டண சேவைகளுக்கான அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் அன்ன பிரசாதம் வழங்கப்படாது எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.