தீக்குளித்து தற்கொலை: வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே ஒருவர் நேற்று தீக்குளித்தார். தீக்குளித்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்து உள்ள சேர்மாதூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது.

மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சாதி சான்றிதழ் வழங்குமாறு பலமுறை அரசு அலுவலகங்களில் கேட்டுள்ளார். இந்த நிலையில், தனக்கு சாதி சான்றிதழ் வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட உதவி மையத்திற்கு வந்ததும், பின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததும் தெரியவந்தது.

தீக்குளித்த வேல்முருகன் 95 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயத் தடுப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு ஆஜரான வழக்கறிஞர் சூர்யாபிரகாசம், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு இது குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதி, உயர் நீதிமன்ற பதிவாளரை அழைத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இந்த சம்பவத்தை தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், தலைமை நீதிபதிக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.