ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் பதவிக்கான பஞ்சாயத்து தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி ஒரு புறமும்,
மறு புறமும் முரண்டு பிடித்து கொண்டு நிற்பதால அதிமுக பிளவுப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களை நிரந்தரமாக ஓரங்கட்டவும், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி, கட்சியை கைப்பற்றவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஓபிஎஸ் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியதன் பலனாக அதிமுக வழக்கு விசாரித்து முடிக்கும் வரையிலும், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் என்ன செய்வது? என்று, புரியாமல் எடப்பாடி பழனிச்சாமி அடுத்தக்கட்டமாக பாஜக மேலிட நிர்வாகிகளை சந்தித்து, முறையிட முடிவு செய்து டெல்லிக்கு விரைந்தார்.
ஆனால் அங்கும் தனக்கு சாதகமான சூழல் இல்லை என்பதை அறிந்து எடப்பாடி பழனிச்சாமி இறுகிய முகத்துடன் தமிழகத்துக்கு திரும்பினார். எடப்பாடி தமிழகம் திரும்பிய சில நாட்களில் எடப்பாடி அணியில் இருந்து முக்கிய நிர்வாகி மைத்ரேயன் ஓபிஎஸ் அணிக்கு மாறி உள்ளார்.
மைத்ரேயனை பொறுத்தவரை தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர். பின்னர் அதிமுகவில் ஒற்றைத்தலைமை பற்றி பிரச்சனை எழுந்தபோதும் ஓபிஎஸ் பக்கம் இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியவர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு முதல் நாள் அதாவது ஜூன் 22ம் தேதி திடீரென எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மைத்ரேயன் ஆதரவு தெரிவித்தார்.
இதன் பின்னர், 100 நாட்கள் கடந்த நிலையில் எடப்பாடி அணியில் இருந்த மைத்ரேயன் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு வந்துவிட்டார். மேலும், அதிமுகவை வழிநடத்தும் திறமை ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமே இருக்கிறது என ஒரே போடாக போட்டது எடப்பாடி அணிக்கு மரண அடி கொடுத்தது போலவே அமைந்தது.
இதனை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி உடனே மைத்ரேயனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்துவிட்டாலும், அவர் குழப்பிவிட்டு சென்றதன் தாக்கத்தை மட்டும் இன்னும் அகற்ற முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
அதாவது மைத்ரேயன் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இருந்தாலும் அவர் முழுக்க முழுக்க பாஜக ஆதரவாளர் என்றே சொல்லப்படுகிறது. அந்தளவுகு டெல்லி பாஜ தலைவர்களுடன் மைத்ரேயன் நெருக்கமாக இருப்பவர்.
இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து பேசியபோது ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருடன் இணக்கமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி இறுக்கமான முகத்துடன் தமிழ்நாட்டுக்கு திரும்பினார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் டெல்லி பாஜக தலைவர்களை தொடர்பு கொண்டு மைத்ரேயன் விசாரித்தபோது யாருக்கு சாதகமாக பாஜக உள்ளது? என்பது தெரிய வந்துள்ளது.
அத்துடன் ‘எதிர்காலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்ற ரீதியில் மைத்ரேயனுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டதால் ‘ரெடி ஜூட் ’ என விருட்டென மைத்ரேயன் ஓபிஎஸ் அணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் போற போக்கில் ச்சூ.. என புரண்டி விட்டதுபோல், ‘எடப்பாடிக்கு சாதகமான சூழல் இல்லை’ என, அவரது ஆதரவாளர்களின் காதை கடித்து விட்டு வந்தது தற்போது கொழுந்துவிட்டு எரிவதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருக்கும் முன்னணி நிர்வாகிகள் இருக்கலாமா? வேண்டாமா? என, சீட்டு குலுக்கிப் போட்டு பார்த்து வருவது கூடாரத்தையே கதிகலங்க வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.