ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டனத் தீர்மானம் : இந்தியா வாக்கெடுப்பில் நடுநிலை..!

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக ஐநா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா புறக்கணித்தது.

உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் நீடித்து வருகிறது.

உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொண்டது ரஷ்யா, ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ரஷ்யாவைக் கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷியாவை கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்தன.

பெலாரஸ், வடகொரியா, நிகரகுவா, ரஷ்யா, சிரியா ஆகிய 5 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன.

அதே நேரத்தில் உக்ரைனில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. போர் மூலமாக அல்ல, பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.

முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷ்யா ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை வைத்தது. ரஷியாவின் இந்த கோரிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என ஐ.நா. சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் இந்தியா உள்பட 107 ஐ.நா. உறுப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன. இதனால் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.