வந்தே பாரத் 4ஆவது விரைவு ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை என 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், 3ஆவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசம் உனா மாவட்டம், அம்ப் அண்டவ்ரா ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 4ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த பிரதமர், அதில் உள்ள வசதிகளை பார்வையிட்டார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் கட்டுப்பாட்டு மையத்தை சோதனையிட்ட அவர். உனா ரயிலை நிலையத்தையும் ஆய்வு செய்தார்.

இந்த ரயிலின் அறிமுகம் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளுக்கு வசதியான மற்றும் வேகமான பயணத்தை வழங்கவும் உதவும் எனவும், உனாவிலிருந்து டெல்லிக்கு பயண நேரம் இரண்டு மணி நேரம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வந்தே பாரத் விரைவு ரயில்கள் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி அதன் சேவைகள் பாதிக்கப்பட்டன. முதல் நாள் எருமை மாடு மோதியும் இரண்டாவது நாள் பசு மாடு மோதியும் சேதமடைந்த வந்தே பாரத் ரயில்கள், மூன்றாவது நாளாக சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வழியிலேயே நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.