ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை அடுத்து அரசின் உத்தரவுக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என்று கூறியது.
இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. மாணவிகளை சில அமைப்புகள் தூண்டி விடுகின்றன, ஹிஜாப் அணிய தடை விதித்தது நடுநிலையான உத்தரவே என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் கடந்த மாதம் 22ஆம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி சுதான்சு துலியா, ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் உரிய நடவடிக்கைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இந்த மறுபட்ட தீர்ப்பின் காரணமாக இந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.
newstm.in