100 ரூபாய்க்கு தினசரி பாஸ்.. யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்..!

சென்னை மெட்ரோ ரயிலில் 100 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் தினசரி பாஸ் திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தினசரி பாஸ் என்ற திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளது. பயணத்தை தொடங்கும் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலும் 100 ரூபாய் பயண கட்டணமும், பயண அட்டைக்கு 50 ரூபாயும் செலுத்தி இந்த தினசரி பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சென்று வரலாம். கடைசி பயணத்தை முடிக்கும் ரயில் நிலைய கவுண்டரில் பயண அட்டையை திருப்பி கொடுத்து 50 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த தினசரி பாஸை யார் வாங்கினார்களோ அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாநகர பஸ்களில் பாஸ் வாங்கியவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும். மற்ற எவரும் பயன்படுத்த முடியாது. ஆனால் மெட்ரோ ரயிலில் அப்படி இல்லை. இதேபோல், 1 மாதம் விரும்பியபடி பயணம் செய்ய 2,500 ருபாய் செலுத்தி மாதாந்திர பாஸ் பெற்றுக்கொள்ளலாம். அதனுடன் பயண அட்டைக்கான கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். இது திருப்பி வழங்கப்படும்.

மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கொரியர் நிறுவனத்தினர் இடையே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த திட்டத்தை அதிகம் ஊக்குவித்து வருகிறது’ என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.