Mee Tooவை புறந்தள்ளிய மலையாள நடிகை… பரவசமான கவிப்பேரரசு வைரமுத்து

தமிழ் சினிமா பாடலசாரியர்களில் வைரமுத்து மிக மிக முக்கியமானவர். ரஜினிகாந்த், விஜயகாந்த் எப்படி சினிமாவுக்குள் வந்து ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற டெம்ப்ளேட்டை உடைத்தனரோ அதேபோல் வைரமுத்து பாடல்கள் எழுத வந்து பாடல்களுக்கான டெம்ப்ளேட்டையும் மாற்றிவைத்தார். வைரமுத்து வந்த பிறகுதான் புதுக்கவிதைகள் பல பாடல்களாக மாறின. அதுமட்டுமின்றி வாலியும்கூட தன்னுடைய ஸ்டைலை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோல், வைரமுத்து – இளையராஜா – பாரதிராஜா கூட்டணி தமிழ் சினிமாவின் விலை மதிக்கமுடியாத கூட்டணி என்றே சொல்ல வேண்டும். இளையராஜா – பாரதிராஜாவுடன் கூட்டணி வைத்து நிழல்கள் படத்தில் முதல்முதலாக பாடல் எழுதிய வைரமுத்து அதன் பிறகு அவர்களுடன் இணைந்து பணியாற்றிய முதல் மரியாதை, மண் வாசனை, அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தன.

குறிப்பாக முதல் மரியாதை படத்துக்கு வைரமுத்து முதல்முதலாக தேசிய விருது பெற்றார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இளையராஜா – வைரமுத்து கூட்டணி உடைந்தது. அதன் பிறகு அவர் இன்றுவரை இணைந்து பணியாற்றவே இல்லை. இளையராஜாவுடனான கூட்டணி முறிந்த பிறகு ஏ.ஆர். ரஹ்மானுடன் கூட்டணி அமைத்த வைரமுத்து அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தார். ரஹ்மானுடன் பணியாற்றிய அத்தனை படங்களின் பாடல்களிலும் வைரமுத்துவின் தமிழும், ரஹ்மானின் இசையும் போட்டிப்போட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு இன்பம் தந்தன. அதேபோல் வைரமுத்துவின் பல கவிதைகளும் ரஹ்மானின் இசையிலேயே பாடல்களாகின.

ரோஜா படத்தில் ரஹ்மானுடன் வைரமுத்து ஆரம்பித்த பயணம் கடைசியாக ஓ காதல் கண்மணி படத்துடன் நின்றுவிட்டது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து எழுதுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டது. அதற்கு, சின்மயி வைரமுத்து மீது வைத்த மீ டூ குற்றச்சாட்டுதான் காரணம் என கருதப்படுகிறது. பாடல்கள்தான் எழுத வைக்கவில்லை படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு அழைப்பார்கள் என வைரமுத்து ரசிகர்கள் நினைத்திருந்த சமயத்தில் அந்த விழாவுக்கும் வைரமுத்துவுக்கு அழைப்பு செல்லவில்லை. இதனால் ரஹ்மான் – வைரமுத்து இனி இணைந்து பணியாற்றுவது நடக்காத காரியமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Rahman

இந்நிலையில் மலையாள நடிகை சம்யுக்தா பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மலையாள சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “எனக்கு வைரமுத்துவின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவரும், ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்த் பாடல்கள் பிடிக்கும் என கூறி வைரமுத்துவின் வரிகளை ரசித்து சுட்டிக்காட்டுகிறார். 

இதனையடுத்து இந்த வீடியோ பகிர்ந்து சம்யுக்தாவை Tag செய்திருக்கும் வைரமுத்து, “மலையாளம் நனைந்த தமிழில் என் பாட்டு வரிகளை நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே! தமிழும் மலையாளமும் உறவு மொழிகள் நாம் கலையால் ஒன்றுபடுவோம்; காலத்தை வென்றுவிடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போது சம்யுக்தா பேசும் வீடியோ வைரலாகியுள்ளது. மேலும், வைரமுத்துவை பாராட்டினாலோ, சினிமா விழாக்களுக்கு அழைத்தாலோ தங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடுமோ என தமிழ்நாட்டில் சிலர் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் மலையாள தேசத்தை சேர்ந்த ஒரு நடிகை பாராட்டியிருப்பது மன திருப்தியை தருகிறது என வைரமுத்துவின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். எது எப்படியோ வைரமுத்து ஒரு மகா கவிஞன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.