தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், சோனு சூட், கிஷோர் குமார், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘ஆச்சார்யா’. இந்தப் படத்தை கொரட்டலா சிவா எழுதி இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த இப்படம் கடைசியில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. தற்போது மலையாளத்தில் வெற்றியடைந்த ‘லூசிபர்’ திரைப்படத்தை தெலுங்கில் மோகன் ராஜா ‘காட்பாதர்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். இதில் சிரஞ்சீவி, சல்மான்கான் மற்றும் நயன்தாரா, சமுத்திரக்கனி, சத்யதேவ், போன்றோர் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலாகி வெற்றியைக் குவித்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிரஞ்சீவி, “‘ஆச்சார்யா’ படம் தோல்வியடைந்ததால் அதற்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை. உண்மையில், நானும், ராம் சரணும் 80 சதவிகித சம்பளத்தைத் தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார். இதனால் பலரும் சிரஞ்சீவியை பாராட்டி வருகின்றனர்.