இபிஎஸ்ஸை சந்திக்க மறுத்த பிரதமர்? இது தான் காரணமா?

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற போதும் பிரதமர் மோடியை சந்திக்க முடியாததற்கு பெங்களூர் புகழேந்தி காரணம் ஒன்றை கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து பணியாற்றிய போதே கட்சிக்குள் எழும் பிரச்சினைகளை சரி செய்ய டெல்லியை நோக்கி விரைவார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசுவார்கள். அதன்பின்னர் இருவரும் ராசியாகிவிடுவார்கள்.

தற்போது இருவரும் இரு துருவங்களான நிலையில்

எவ்வளவு முயன்றாலும் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. ஒருமுறை டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் என யாரை சந்திக்கவும் அனுமதி கிடைக்காமல் சென்னை திரும்பினார். சமீபத்தில் டெல்லி சென்ற போது அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை பார்க்க முடியாமல் திரும்பி வந்தார்.

பிரதமர் மோடி ஏன் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்பது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளாரான பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார்.

அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக மாவட்ட நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். புகழேந்தி தலைமையில் புதிய நிர்வாகிகள் சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய பெங்களூர் புகழேந்தி, “எடப்பாடி பழனிசாமி ஒரு ஊழல்வாதி , அவர் தொடர்ந்து ஊழல் வழக்கை சந்தித்து வருகிறார் என்ற காரணத்தினால் தான் பிரதமர் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுத்து வருகிறார்.

ரூ.4,500 கோடிக்கான ஊழல் வழக்கை தற்போது எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வருகிறார். மற்றும் கொடநாடு கொலை வழக்கு என இப்படி பல வழக்குகளில் சிக்கியுள்ளார். எனவே விரைவில் அவர் மீது வழக்கு பதிவாகி சிறைக்குச் செல்வார். இதனால் அவர் தேர்தலில் நிற்க முடியாத நிலை உருவாகும். அதிமுகவில் உள்ளவர்களே எடப்பாடி பழனிசாமியை நம்பாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.