எடப்பாடிக்கு வைத்த குறி: சிக்கிய காண்ட்ராக்டர் – அடுத்து நடக்கப் போவது என்ன?

ஆட்சியில் டெண்டர்களை எடுத்த காண்ட்ராக்டர்கள் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனையில் சிக்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியும் விரைவில் சிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றிய அரசின் கீழ் வரும் வருமான வரித்துறை அதிமுக ஆட்சியில் பலன் பெற்ற ஒப்பந்ததாரர்களை குறிவைத்து சோதனைகளை நடத்தி வருகிறது.

வடவள்ளி சந்திரசேகர், செய்யாதுரை ஆகிய ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் ஜூலை மாதம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் இருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.

முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து நடத்தி வரும் சோதனைகளில்கூட இவ்வளவு சிக்கவில்லை என்கிறார்கள்.

இந்நிலையில் புதுக்கோட்டை பாண்டித்துரை தொடர்புடைய இடங்களில் மூன்று நாள்கள் (அக்டோபர் 12, 13, 14 )வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் முதல்வராகவும் இருந்த சமயம் நெடுஞ்சாலைகளில் ஒளிரும் போர்டுகள் தமிழகம் முழுவதும் அமைக்கும் பணிக்கான டெண்டர் பாண்டித்துரையின் நிறுவனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான டெண்டரும் பாண்டித்துரைக்கே வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் பார்த்த நிறுவனம் பெரிய தொகையை மேலிடத்துக்கு கொடுத்ததாகவும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்நிலையில் வருமான வரித்துறை சோதனையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வரும் தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.