காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் அதிமுகவுடையதா?… துரைமுருகன் அளிக்கும் விளக்கம்

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழ்நாடு நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். வீணாகும் வெள்ள நீரை சேமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளும்.

மேட்டூர்- சரபங்கா நதிகள் இணைப்புப் பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை. காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகள் மற்ற மாநிலங்களிலும் தாமதமாக நடைபெற்று வருகிறது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசு உடைய திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம். 

தமிழ்நாட்டில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆனால், வரும் ஐந்து ஆண்டுகளில் அவர்களை படிப்படியாக நிரந்தர பணியாளர்களை பணியில் அமர்ந்த தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.