தானே: கையை பிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியை ஆட்டோவில் தரதரவென்று இழுத்து சென்ற டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த 21 வயது பட்டதாரி மாணவி நேற்று கல்லூரிக்கு ெசல்வதற்காக, அதேபகுதியைச் சேர்ந்த ஆட்டோவில் பயணித்தார். அப்போது அந்த ஆட்டோவின் டிரைவர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவிக்கும், ஆட்டோ டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஆட்டோவில் இருந்து இறங்குவதாக மாணவி டிரைவரிடம் தெரிவித்தார்.
பின்னர் ஆட்டோவை டிரைவர் நிறுத்தினார். அடுத்த சில நொடிகளில் ஆட்டோவை எடுத்ததால், அந்த மாணவி கீழே இறங்க முடியவில்லை. அதனால் கிட்டதட்ட 500 மீட்டர் தூரம் ஆட்டோவை பிடித்தவாறே தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்ராஜ் ரனாவேர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரித்த போது, அவரை ஆட்டோ டிரைவர் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.
அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவி ஆட்டோவில் இருந்து இறங்க முயன்ற போது, அப்படியே ஆட்டோவை வேகமாக டிரைவர் ஓட்டிச் சென்றதால் மாணவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பி ஓடிவிட்டதால், அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறோம்’ என்றார்.