நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை 12 வாரம் ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி :மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ எனப்படும் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுதும் பிளஸ் ௨ முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, ‘நீட்’ எனப்படும் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை, இந்திய மருத்துவ கவுன்சில் அறிமுகம் செய்தது.

மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் வாதிட்டதாவது:

இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு கொடுத்த அறிக்கைப்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோருவதற்காக, ‘மருத்துவ படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை 2021’ என்ற மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி, அது பரிசீலனையில் உள்ளது.

எனவே, இந்த வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.