முதன்முறையாக தி.நகரில் பொருத்தப்பட்டுள்ள FRC கேமராக்கள்; எதற்காக இந்த கேமராக்கள்?

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து சென்னை தியாகராய நகர் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 300 சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் நொடிக்கு நொடி கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் துணிகள், பட்டாசு மற்றும் வீட்டுக்கு தேவையானப் பொருட்களை வாங்குவதற்காக சென்னைவாசிகள் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தியாகராய நகர் பகுதியில் குவிந்துவருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு பாதுகாப்புகள் போன்ற விஷயங்களை குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ரங்கநாதன் தெரு முழுவதும் காவல்துறையினுடன் நடந்து சென்று பாதுகாப்பு குறித்து பணியிலிருந்த காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ’’பாண்டி பஜார், தி.நகர், மாம்பலம் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு உதவும் வகையில் MAY I HELP YOU DESK போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆட்டோ மற்றும் கார்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது.
image
முதல்முறையாக தியாகராய நகரில் ஆறு FRC கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் குற்றவாளிகளை கண்டறிவதற்காக குற்றப்பிரிவு போலீசார் மப்டியில் உள்ளனர். இந்த கேமராக்கள் மூலம் பில்டர் செய்து ஏற்கனவே அவர்கள் மீது குற்றங்கள் உள்ளதா என்பது குறித்து கண்டறியவும் அவை உதவியாக இருக்கும்.  குற்றவாளிகளை பிடிப்பதற்காக முழு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். வழக்கத்திற்கு மாறாக 50 கேமராக்கள் கூடுதலாக போடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 250 கேமராக்களை சேர்த்து மொத்தம் 300 கேமராக்கள் மூலம் தியாகராய நகர், பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு போன்ற முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மூன்று இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே தியாகராய நகர் பகுதிகளில் அனுமதிக்கப்படுகிறது. தியாகராய நகர் பகுதியை சுற்றி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் குறையும் ” எனவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.