கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் வள்ளித்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப். கப்பலில் பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி ஸ்ரீஜா என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் பிரதூசி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். பிரதீப் தற்போது வேலை நிமித்தமாக வெளியூரில் உள்ள நிலையில், அவரது மனைவி ஸ்ரீஜா வீட்டில் பிள்ளைகளை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை ஆண் குழந்தைகள் இரண்டையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு தனது 2 வயது பெண் குழந்தையான பிரதூசியை அழைத்து கொண்டு வீட்டின் அருகில் உள்ள சப்போட்டா மரத்தில் பழங்களை பறிக்க சென்றார். இதையடுத்து வீட்டிற்கு வந்த ஸ்ரீஜா, வீட்டினுள் குழந்தையை விட்டுவிட்டு மொட்டை மாடிக்கு சென்று காயவைத்திருந்த துணிகளை எடுத்து வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
குழந்தையின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க நகைக்காக யாரேனும் தூக்கி சென்றுள்ளனரா என்று அச்சமடைந்த ஸ்ரீஜா வீட்டின் வெளியே பல இடங்களில் தேடி உள்ளார். எங்கும் கிடைக்காத நிலையில் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பகுதியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் எந்த தடயமும் கிடைக்காத நிலையில், அவர்களது வீட்டின் பின்புறத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. சந்தேகமடைந்த போலீசார் குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து குளத்தினுள் இறங்கி தேடிய போது குளத்தினுள் மூழ்கிய நிலையில் குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை குளத்தில் விழுந்து பலியான சம்பவம்,அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது