Video: பல்பை திருடி 'பல்ப்' வாங்கிய போலீஸ்; சிசிடிவியில் சிக்கியதால் சஸ்பெண்ட் – அதுக்கு அவர் சொன்ன காரணம் இருக்கே!

உத்தரப் பிரதேசத்தில் கடையின் வெளியே தொங்கிக்கொண்டிருந்த பல்பு ஒன்றை காவலர் திருடும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் பிரக்யராஜ் மாவட்டத்தில் உள்ள புல்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ராஜேஷ் வர்மா. அவர் அப்பகுதியை சேர்ந்த கடையின் வெளியே எறிந்துகொண்டிருந்த பல்பை மெதுவாக கழட்டி, தன்னுடைய பாக்கெட்டில் வைத்து திருடிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

கடந்த அக்.6ஆம் தேதி, அன்று, தசரா கொண்டாட்டத்தின் போது, ராஜேஷ் இரவு பணியில் இருந்ததுள்ளார். அன்றுதான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் காலையில், பல்ப் காணமால் போனதை கண்ட கடைக்காரர், சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துள்ளார். அதில்தான், காவலர் ஒருவரே அவருடைய பல்பை திருடிச்செல்லும் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 
இதைத்தொடர்ந்து, அவர் அளித்த புகாரின்பேரில், ராஜேஷ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர், பதவி உயர்வு பெற்று புல்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றமாகி வந்துள்ளார். 

இதுகுறித்து, குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷ், அன்று தான் பணியாற்றிய இடத்தில் இருட்டாக இருந்ததால், அங்கு பயன்படுத்துவதற்காகவே அதை கழட்டியதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக, அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த சில நாள்களுக்கு முன்னர், கான்பூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரிடம் இருந்து மொபைலை காவலர் திருடிச்சென்றதும் நினைவுக்கூரத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.