குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? – கி.வீரமணி கேள்வி!

இமாச்சல பிரதேச தேர்தலுடன் சேர்த்து குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 2 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், இமாச்சல பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி, அத்துடன் சேர்த்து ஏன் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களிலும், ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி போன்ற சட்ட வல்லுனர்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.வை எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விட முடியும். ஆனால், அதே அளவு உறுதியான நம்பிக்கை, குஜராத்தைப் பொறுத்தவரையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்களுக்கு இன்னும் ஏற்படவில்லையோ என்ற சந்தேகமே அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பஞ்சாபைப் போல அங்கே ‘ஆம் ஆத்மி கட்சி’யின் பிரசாரம் கடுமையாக இருக்கிறது. 5 ஆண்டுகள் ஆட்சியின் மீது உள்ள மக்களின் எதிர்ப்பு – அதிருப்தியை தம்வசமாக்கி, பல தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அள்ளி வீசுகிறார்.

எனவே, குஜராத் தேர்தலுக்கு இம்முறை புதிய வித்தைகளைக் கையாள வேண்டும் என்பதால், ஒருவேளை இந்தத் தேர்தல் தேதி அறிவிப்பு கால தாமதம் ஆகிறது போலும். எப்படி இருந்தாலும், முன்பு போல, எல்லாக் காலத்திலும் எல்லா வித்தைகளும் பலிக்குமா? என்பதும் விவரமறிந்தவர்கள் கேட்கக் கூடிய கேள்வி தான். இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.