கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி பகுதியில் இருந்து விழுப்புரத்திற்கு அன்றாடம் நிறைய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருக்கின்றன.
இத்தகைய நிலையில் இன்று பண்ருட்டியில் இருந்து கடலூர் வந்த தனியார் பேருந்து நெல்லிக்குப்பம் அருகில் அதிவேகத்துடன் வந்தது. அப்பொழுது திடீரென ஓட்டுனர் பிரேக் அடித்தார். இதனால், படிக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் தனது குழந்தையுடன் படிகளில் உருண்டு விழுந்து சாலையில் பலத்த காயம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்த பெண் கீழே விழுந்த இடத்தில் இருந்த கடைக்குள் சிசிடிவி காட்சிகளில் இந்த சம்பவம் பதிவாகி இருக்கிறது.
அதி வேகமாக சென்ற பேருந்து திடீரென பிரேக் அடித்தபோது நிலை தடுமாறி தாயும், குழந்தையும் விழும் வீடீயோ பதைபதைக்க வைத்துள்ளது. இப்படி தனியார் பேருந்துகள் அதிவேகமாக பறப்பதை கண்டித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.