நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் சில நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து இரண்டு குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.
ஜூன் மாதம் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பி பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டனர். இதனையடுத்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என தெரியவந்தது. அதேசமயம் நயனும்,விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வி எழுந்தது.
இதனையடுத்து அதுகுறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவானது மருத்துவமனை நிர்வாகத்திடமும், மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியது. ஆனால் இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் விக்கியும், நயனும் அமைதிக்காத்துவந்தனர்.
இந்தச் சூழலில் அவர்கள் சுகாதாரத் துறை குழுவினரிடம் அறிக்கை தாக்கல் செய்ததாகவும், அந்த அறிக்கையில் நயன் – விக்கி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தது, பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள், கடந்த டிசம்பர் மாதம் வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நயன் – விக்கி விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்ற முழுவிவரமும் அறிவிக்கப்படும்” என்றார்.