மோடியின் துரோகம்; பகீர் கிளப்பிய பாஜக மூத்த தலைவர்!

தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுப்பிரமணிய சாமி. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பல்வேறு விஷயம் தொடர்பாக அடிக்கடி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

பாஜகவில் இருந்து கொண்டு சொந்த கட்சியையே கிழித்து தொங்கப்போடுவது சுப்பிரமணிய சாமிக்கு கை வந்த கலை. ஆனாலும் பாஜ மேலிடம் அது குறித்து எப்போதும் கருத்து தெரிவிக்காது.

ஒருவேளை சுப்பிரமணிய சாமியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்துமேயானால், ‘அது.. சுப்பிரமணிய சாமியின் சொந்த கருத்து. கட்சி கருத்து இல்லை’ என, தடாலடியாக பாஜக அறிவித்துவிடும்.

கட்சி தலைமையே நடவடிக்கை எடுக்க தயங்கும் அளவுக்கு சுப்பிரமணிய சாமி செய்யும் அரசியல் செய்து வருவது பாஜகவுக்கு தலைவலி தரும் செயல் என்றும் சொல்லலாம்.

அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சுப்பிரமணிய சாமி மத்திய அரசு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம், இந்தியா- சீனா எல்லை விவகாரம் குறித்து பகிரங்கமாக விமர்சித்தது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது போன்ற தருணங்களில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட எவரையும் விட்டு வைக்காமல் வெளிப்படையாகவே விமர்சிப்பதை சுப்பிரமணிய சாமி வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதன் மூலம், எதிர்க்கட்சிகளுக்கே கண்டண்ட் கொடுப்பது சுப்பிரமணிய சாமி தான் என, சமூக வலைதளவாசிகள் பாஜகவை கிண்டலடித்து எழுதி தள்ளுவதும் அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்து இருக்கும் கருத்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சுப்பிரமணியன் சுவாமி தன்னுடைய டிவிட்டர் பதிவில், ‘லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் விதமாக சீன மொழியில் அந்த பகுதிகளை குறிப்பிட்டு எஸ்சிஓ மாநாட்டில் சீனா வழங்கி இருக்கிறது.

மோடி இந்த கூட்டத்துக்கு சென்று, இந்தியாவின் தேச நலனுக்கு துரோகம் செய்துள்ளார். கடந்த 1995ம் ஆண்டு பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை கடந்து டெப்சாங், கல்வான், கைலாஷ் மலைகளின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது.

ஆனால், இதை பற்றி எல்லாம் மோடி கண்டு கொள்ளாமல் உள்ளார்’ என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன்னுடைய டிவிட்டர் பதிவில் கூறியிருப்பது பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.