ஒரே இடத்தில் மூனு… வேற லெவல் வளர்ச்சி காணும் கிளாம்பாக்கம்!

சென்னைவாசிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். பல்வேறு காரணங்களால் பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. வரும் 2023 பொங்கல் பண்டிகையை ஒட்டி திறப்பு விழா நடைபெறும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமையும், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரிதும் குறையும். மேலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் நேரடியாக கிளாம்பாக்கம் வந்துவிடலாம். இதுதவிர சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பெறுவதற்கான கோப்புகள் கடந்த ஓராண்டாக தமிழக அரசிடம் காத்திருக்கிறது.

எப்படியும் ஒப்புதல் கிடைத்து கிளாம்பாக்கம் மெட்ரோவை விரைவில் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதுதவிர புறநகர் ரயில் நிலைய வசதியும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரவிருக்கிறது. இதற்கான வேலைகளை தெற்கு ரயில்வே உடன் இணைந்து செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ரயில் நிலையம் அமையும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த சூழலில் பேருந்து நிலையத்தை விட்டு விட்டு, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பேசுபொருளாக மாறியுள்ளது. இவ்வாறு கிளாம்பாக்கத்தில் மூன்று விதமான வசதிகள் வருவதால் அப்பகுதி மீதான எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் அருகிலேயே இருப்பதால் மக்கள் அதிக அளவில் கிளாம்பாக்கத்திற்கு இடம்பெயர்வர். புதிய குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் உருவாகும். தற்போதே நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயரத் தொடங்கிவிட்டது. இதையடுத்து பொழுதுபோக்கு அம்சங்கள் வரிசை கட்டி வருவதற்கு தயாராகி வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும், தொழிலதிபர்களும் வணிக வளாகங்களை கொண்டு வர ஆலோசித்து வருகின்றனர்.

இதுதவிர கல்வி, சுகாதாரம் ஆகியவை தொடர்பான வரவுகளும், வேலைவாய்ப்பை பெருக்கும் அம்சங்களும் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளாம்பாக்கம் பகுதியானது செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது. எனவே கிளாம்பாக்கத்தில் கொண்டு வரப்படும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும், செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்தகட்டத்திற்கு இட்டுச் செல்ல பெரிதும் உதவிகரமாக இருக்கும். மனிதவள மேம்பாட்டு பட்டியலில் படிப்படியாக வளர்ச்சி காணும் என்று சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.