பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சிறுவனின் உறவினர்கள் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுனில் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஸ்வின் ஆதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருவதாக தெரிய வருகிறது. கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அஸ்வினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர். சிகிச்சையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து கேரள மாநிலம் நெய்யற்றங்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அஸ்வினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆசிர் திரவம் உட்கொண்டதால் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாக தெரிவித்திருந்தனர். மருத்துவமனை நிர்வாகம் கொடுத்து தகவலின் பெயரில் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சிறுவனின் உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஸ்வின் சிகிச்சை பலனளிக்காமல் நெய்யாற்றங்கரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற சிறுவன் அங்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்திருக்கலாம் என பெற்றோர்களால் நம்பப்படுகிறது. இதனால் தனியார் பள்ளியின் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.