இந்தியாவில் ஐஐடி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களிலும் இந்தி மொழியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 15ம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், இந்த ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
]இதற்கிடையே, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, “தமிழில் எழுதத் தெரியாத தமிழர்களை உருவாக்கிய ஆட்சி தான் திராவிட மாடல்.
இந்த திராவிட இயக்கங்கள் தமிழை வெறும் பேசும் மொழியாகவே ஆக்கி இருக்கின்றன. ஆனால் அதை உடைத்தெறியும் வகையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றிய பெருமைகளை எடுத்துரைக்கிறார்.
மத்திய அரசாங்கம் தேசியக் கல்விக்கொள்கையில் தெளிவாக தெரிவித்துள்ளது. முதல் முன்னுரிமை மாநில மொழிக்குத்தான். அடுத்து ஆங்கிலம் அதற்கடுத்துதான் இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழி என்று. சமூக நீதி, நாளுக்கு நாள் வளர்வது பிரதமர் மோடியின் காலத்தில் தான்” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.