நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 ஆண்டு விழா சென்னையில் உள்ள எஸ்ஆர்எஸ் சர்வோதயா பள்ளியின் மகளிர் விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது தான் ஹரிஜன சங்கம்.
மகாத்மா காந்தி ஒருவர் மட்டுமே இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தினார். நாம் எல்லோரையும் ஒரே குடும்பமாக மாற்றினார். அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதில் மகாத்மா காந்தி தீவிரமாக இருந்தார். காந்தியின் மறைவுக்குப் பின்னர் வசதி படைத்தவர்களுக்கே எல்லாம் என்ற நிலை உருவானது.
கல்வி, தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு என எல்லாவற்றிலும் தமிழகம் முன்னிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் கல்வித்துறையில் கணக்கிட்டால் 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 28 சதவிகிதம் மட்டுமே பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் 51 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர்.