வனத்துறையின் எதிர்ப்பால் 41 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி தவிக்கும் கிராமம்!

சென்னை: வனத்துறை எதிர்ப்பு காரணமாக 41ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிபுரம் கிராம மக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராம மக்கள் சார்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்களது கிராமத்திற்கு மின் இணைப்புக்கோரி கடந்த 1979ம் ஆண்டு மின்சார வாரியத்திடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் குழாய் இணைப்பு வழங்கி அதன் மூலம் குடிநீர் வழங்க உத்தரவிட  வேண்டுமெனவும், வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மனு ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது, மின்சார வாரியம் அளித்த பதிலில், மின்சார இணைப்பு அளிக்கும் வகையில் 14 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அரசியல் சாசனப்படி, மக்களுக்கான அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை வழங்குவது அரசின் பொறுப்பு எனக் கூறிய மனித உரிமை ஆணையம்,  இதற்காக அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், மின்சார வசதிக்கோரி 25 குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனித்தனியாக விண்ணப்பிக்கவும், அவற்றை பரிசீலித்து மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட ஆணையம், குழாய் மூலம் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. 

அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் தலையிட கூடாதென வனத்துறைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.