பலாத்கார புகார் கொடுத்த பெண் மாயம் இளைஞருக்கு நிபந்தனையுடன் ஜாமின்| Dinamalar

மும்பை, பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பெண், ஒரு ஆண்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இளைஞருக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, 22 வயது பெண், 2020 பிப்ரவரியில் தன் காதலன் மீது புகார் கொடுத்தார். தானும், 26 வயதான காதலனும், 2018ல் இருந்து பழகி வந்துள்ளதாகவும், இது இரு குடும்பத்தாருக்கும் தெரியும் என்றும் புகாரில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், 2019ல் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதன்பின், அந்த பெண்ணுடன் பழகுவதை அந்த இளைஞர் தவிர்த்துள்ளார். தான் கர்ப்பமடைந்ததை குடும்பத்தாரிடம் தெரிவிக்க தயக்கமடைந்த அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த 2020 ஜன., 27ல் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை ஒரு கட்டடத்தின் வாயிலில் வைத்து விட்டு, அந்தப் பெண் மாயமானார். இது தொடர்பாக அந்தப் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, 2020 பிப்ரவரியில் தன் காதலன் மீது பாலியல் பலாத்கார புகாரை அந்தப் பெண் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் அந்த காதலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருமணம் செய்ய தயார்

ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

பாலியல் புகார் கொடுத்த தன் காதலியை திருமணம் செய்வதற்கு தயாராக உள்ளதாக இளைஞர் கூறியுள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டு, மற்றொருவரால் தத்து எடுக்கப்பட்டுள்ளது.

பரஸ்பரம் ஒப்புதலுடன் உடலுறவு நடந்துள்ளதாக புகாரில் அந்தப் பெண் கூறியுள்ளார். இந்நிலையில், ஒரு ஆண்டுக்குள் அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டால், அவரை இந்த இளைஞர் திருமணம் செய்ய வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.