
ஜப்பான் நாட்டில் வெளியாகும் 'ஆர்ஆர்ஆர்'
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து இந்த ஆண்டில் வெளியான தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் படத்தை நேரடியாகக் களமிறக்கி உள்ளார்கள். பல பிரிவுகளில் இந்தப் படம் போட்டியிடுகிறது.
இதனிடையே, ஜப்பான் நாட்டில் நாளை மறுதினம் 'ஆர்ஆர்ஆர்' படத்தை வெளியிட உள்ளார்கள். அங்கும் படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் ஜப்பான் தலைநகரான டோக்கியோ சென்றுள்ளனர். அவர்களுடன் ராஜமவுலியும் இணைந்து கொள்ள உள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி 2' படமும் ஜப்பான் நாட்டில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு, டிவி சேனல்கள், நாளிதழ்களுக்குப் பேட்டிகள் என படத்தை அனைத்து ஜப்பான் ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளார்களாம். ஒரு வாரத்திற்குப் பிறகு 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.